ஜம்மு காஷ்மீர் மக்களைச் சந்திக்கச் சென்ற சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோரை மோடி அரசு கைது செய்துள்ளது. பாஜக அரசின் இந்த அட்டூழிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே .பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப்பிரிவு 35ஏ ஆகியவற்றை அதிரடியாக நாடாளுமன்றத்தில் ரத்து செய்ததை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் பிரதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டு எதிர்கட்சி தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசப் தாரிகாமி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருடைய உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.
இந்நிலையில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா ஆகியோர் இன்று (09.8.2019) தோழர் முகமது யூசுப் தாரிகாமியையும்மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களையும், ஜம்மு - காஷ்மீர் மக்களையும் சந்திப்பதற்காக சென்ற போது, ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மத்திய பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கையும், ஜனநாயக விரோத செயல்பாட்டையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்டவிரோத, ஜனநாயக விரோத செயல்பாட்டைஎதிர்த்து கண்டனம் முழங்கிடுமாறு கட்சி அணிகளையும், தேசபக்த சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மேலும் ஜம்மு - காஷ்மீர் மக்களைச் சந்திப்பதற்கு சென்ற தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோரையும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு
மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.